பொருளாதார சவால்கள் குறித்து இலங்கைக்கு புதிய எச்சரிக்கை

கடந்த காலத்தில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீண்டு வருகிறது.

எனினும் துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், உலகளாவிய நிலையற்ற காரணிகளின் அடிப்படையில், இலங்கை, குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்நோக்கவேண்டியேற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ODI குளோபல் மற்றும் வறுமை பகுப்பாய்வு மையத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் உருமாறும் பொருளாதார வளர்ச்சியை 2025 முதல் 2030 நிலைநிறுத்துதல் என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, மத்திய வங்கியின் தற்போதைய உதவி ஆளுநர் சந்திரநாத் அமரசேகர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் யெவெட் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் சிரிமல் அபேரத்ன ஆகியோர் அடங்கிய ஒரு சுயாதீன ஆராய்ச்சி குழுவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதுடன், தற்போதுள்ள பேரியல் பொருளாதார உறுதிப்படுத்தலைப் பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளைச் செயற்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட வறுமை விகிதம் மக்கள் தொகையில் 25 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடுமையான கடன் மறுசீரமைப்பு மற்றும் அதிகரித்து வரும் வறுமையைத் தவிர்க்கக் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அவசரமாகச் செயற்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே வர்த்தகப் போரின் அபாயங்களுடனும், இருண்ட உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்துடனும் போராடி வரும் இலங்கைக்கு, கடனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் இது குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சி சுமார் 3 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.

எனினும், மறுசீரமைப்புகள் இல்லையெனில், ஏற்கனவே உயர்ந்த வறுமை நிலைகள் மேலும் உயரக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் தொடங்கிய சர்வதேச நாணய நிதிய திட்டத்தை ஆரம்பிப்பதற்கும், மிகவும் தேவையான கொள்கை நிலைத்தன்மைக்கு அடிப்படையை வழங்கும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.