பொரளை மயானத்தில் காருக்குள் கட்டப்பட்டு : மீட்கப்பட்ட தொழிலதிபர் உயிரிழப்பு

பொரளை மயானத்தில் காருக்குள் கட்டப்பட்டு : மீட்கப்பட்ட தொழிலதிபர் உயிரிழப்பு

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான ஐம்பத்திரண்டு வயதான தினேஷ் ஷாஃப்டர் இன்று வியாழக்கிழமை மாலை பொரளை பொது மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தொழிலதிபரான தினேஷ் ஷாஃப்டர் இன்று பிற்பகல் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று மாலையில் இருந்து அவர் கையடக்க தொலைபேசியில் பதிலளிக்காததால், அவரது மனைவி ஜிபிஎஸ் மூலம் தொழிலதிபரை கண்டுபிடித்தபோது, அவர் மயானத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

காரின் சாரதி இருக்கையில் கழுத்து மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் ஷாஃப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவர் தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , வர்த்தகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த வர்த்தகரிடம் இருந்து பெறப்பட்ட இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மீளப் பெற்றுக்கொடுக்காத நபர் ஒருவருக்கு எதிராக குறித்த வர்த்தகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.