பொது பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – UNP தெரிவிப்பு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமைக்கு பொறுப்பேற்று, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு அமைச்சர் ஆனந்த விஜேபாலவே பொறுப்புக்கூற வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த அறிக்கையின் ஊடாக இப்படுகொலைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சில தீர்க்கமான நடவடிக்கைகளை முன்வைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, உத்தியோகபூர்வ சட்டத்தரணிகள் குழுவின் தலைவர் என்ற ரீதியில் சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தகுந்த பொலிஸ் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விருப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், சட்டத்தரணிகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.