பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின்னர் வெளியாகின்ற உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளதுடன் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் நிலையங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களது பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். அவர்கள் வாக்கு எண்ணும் பணிகளை அவதானித்து, அதிகாரிகள் கூறுகின்ற எண்ணிக்கைகளை அதன் பின்னர் ஏற்படுகின்ற சீர்திருத்தங்களைக் கணக்கில் கொள்ளாமல் தெளிவற்ற விபரங்களை வெளியிடக்கூடும்.
இவ்வாறான தெளிவற்ற உத்தியோகபூர்வமற்ற விபரங்கள், உத்தியோகபூர்வ பெறுபேறுகளிலிருந்து வேறுபடும்.
எனவே பொதுமக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இறுதியாக உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படுகின்ற முடிவுகளை மாத்திரமே நம்ப வேண்டும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
