
பேருந்து விபத்து: ஒருவர் பலி
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பௌத்த மத்திய ஸ்தானத்திற்கு அருகில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் – பாலாவி, ஹஸ்னியா புரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இஸ்மாயில் முஹம்மது ஜமீல் (வயது – 56) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்து புத்தளம் நகரில் உள்ள தனது வியாபார நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வவுனியாவில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டது.
விபத்து தொடர்பாக தனியார் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.