பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண் படுகாயம் : சாரதி கைது!

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில், மிதிபலகையிலிருந்து தவறி வீழ்ந்து பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமும் ஹட்டன் முதல் நுவரெலியா வரை சேவையில் ஈடுபடும் பேருந்து இன்றைய தினம் இயங்கவில்லை.

விபத்து சம்பவித்த பேருந்து, தலவாக்கலையில் இருந்து புறப்படும் போதே அதிக பயணிகள் இருந்ததாகவும், இதனால் நானுஓயா டெஸ்போட் பகுதியில் பேருந்தினை நிறுத்தாமல் பாரிய வளைவு ஒன்றில் பேருந்தினை மெதுவாக இயக்க முற்பட்டபோது, குறித்த பெண் பேருந்தினை நிறுத்துவதாக நினைத்து பேருந்தில் ஏறுவதற்கு முயன்ற போதே, விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

குறித்த வீதியில் பேருந்து சேவை உரிய முறையில் ஈடுபடாமையே விபத்துக்கு காரணம் என பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .