பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் நடத்துனர்கள் இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்த பெண் நடத்துனர்கள் கொட்டாவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் (MMC) இருந்து தமது பணிகளை ஆரம்பித்தனர்.

அண்மையில் இலங்கை போக்குவரத்து சபையினால் 19 பெண்கள் நடத்துனர்களாக நியமிக்கப்பட்டனர்.

அரச போக்குவரத்து துறையில் பெண்கள் இப்பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில், குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு அங்கமாக இந்த நியமனங்கள் பார்க்கப்படுகின்றன.