பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்தநிலையில் மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால், அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

குறித்த மூவரும் தலைமறைவாகியிருந்த நிலையில் அவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை உத்தரவு கடந்த செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் சந்தேக நபர்களில் ஒருவர், ஹொரவப்பொத்தானை பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.

வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.