பெண் அமைச்சருக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய இளைஞன் கைது

இந்தியா- மஹாராஷ்ட்ரா மாநில பாஜக அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச குறுஞ் செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டேவுக்கு கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி ஆபாசமான குரல் பதிவுகளை அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதோடு பங்கஜா முண்டேயின் கையடக்க தொலைபேசிக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளையும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களையும், ஆபாசமான சித்தரிக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்து வந்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத பங்கஜா முண்டே தொடர்ச்சியாக அந்த நபர் அத்துமீறி செயல்பட்டு வந்ததால் பா.ஜ.க அலுவலக சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் நிகில் பாம்ரேயிடம் புகார் அளித்தார். உடனே அவர் சைபர் பிரிவு பொலிசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணையைத் தொடங்கினர்.

அத்துமீறிய நபரை அவரது கையடக்க தொலைபேசியின் நம்பரை வைத்தே பொலிசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். செல்போன் சிக்னல் குற்றவாளி புனேயில் இருப்பதாகக் காட்டியுள்ளது. அவரது இருப்பிடத்தை துல்லியமாக கண்டுபிடித்த மும்பை பொலிசார் புனே பொலிசாரின் துணையோடு 25 வயதுடைய குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் குறித்த இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.