பெக்கோ சமனின் மைத்துனருக்கு தடுப்புக்காவல் உத்தரவு
திட்டமிட்ட குற்றவாளியான பெக்கோ சமன் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரது மைத்துனரை 7 நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபரை 07 நாள்கள் தடுப்பு காவல் உத்தரவுக்கு அமைய தடுத்து வைப்பதற்கு மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றவாளியான பெக்கோ சமன்’ என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்னவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வௌியான தகவல்களின் அடிப்படையில், அவரது மைத்துனரை பெலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
சந்தேக நபரிடம் இருந்த போதைப்பொருள் மற்றும் மோட்டார் வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர் . அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மித்தெனிய, வெலிப்பிட்டியவைச் சேர்ந்த 27 வயதானவர் என்பதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அந்தப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைத்துப்பாக்கி, 01 தோட்டா மற்றும் 550 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
