புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : சுயாதீன குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டைத் தற்காலிகமாக நிறுத்தி, முறையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் உத்தரவிட்டார்.

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துமாறு பெற்றோர்கள் மேற்கொண்ட போராட்டத்தினையடுத்து, ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

எவ்வாறாயினும், புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற நிபுணர் குழு எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முன்னதாக தெரிவித்தார்.

எனினும், அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளை ஆராய்வதற்காக மற்றுமொரு சுயாதீன குழுவைப் பிரதமர் அண்மையில் நியமித்தார்.

இந்தநிலையில் குறித்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் தற்சமயம் கையளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை மேற்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

அதேநேரம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோர்கள் செய்த முறைப்பாடுகளின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் முடியும் வரை புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கக் கூடாது எனக் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளரும் அலவ்வ பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.