புத்தாண்டு பிறக்கும் போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரி : சந்தேக நபரான 21 வயது இளைஞன் கைது!

அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 82615 எம். சரத் குமார, புத்தாண்டு பிறக்கும் இரவில் கடமையில் ஈடுபட்டு, அம்பலாந்தோட்டை வலவே கங்கை பாலத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட வீதி தடுப்பில் வாகன பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதிகாலை சுமார் 2.30 மணியளவில், சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்துவதற்காக அவர் தனது டார்ச் லைட்டை ஒளிரச் செய்த போது, எதிர்பாராத வகையில் வேகத்தை குறைக்காமலே வந்த அந்த கார், அவரை கடுமையாக மோதியதுடன் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக 1990 அவசர ஊர்தி மூலம் அதிகாரியை ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களின் காரணமாக புத்தாண்டு அன்று அதிகாலை 04.05 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்தது.

2009.02.01 அன்று ஆல்பிட்டிய பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இணைந்து பொலிஸ் சேவையில் சேர்ந்த மறைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 82615 எம். சரத் குமார, இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.

சூரியவெவ, வீரியகம பாடசாலைக்கு எதிரே நிரந்தரமாக வசித்து வந்த அவர், ஹம்பாந்தோட்டை, மத்தள, சூரியவெவ மற்றும் சீனா ஹார்பர் ஆகிய பொலிஸ் நிலையங்களில் பணியாற்றியுள்ளார்.

2024.12.31 அன்று அவர் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று கடமையாற்றத் தொடங்கியிருந்தார்.

இவ் விபத்தில், அவருடன் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் 9902 சமன் பண்டா, காரால் மோதப்பட்டு காயமடைந்த நிலையில், ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தப்பிச் சென்ற காரின் தடயங்களைப் பின்தொடர்ந்த பொலிஸ் அதிகாரிகள், அந்த வாகனத்தை அம்பலாந்தோட்டை ரிதீகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடித்தனர்.

அதே நாளில் சந்தேக நபரான ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார், அவர் 21 வயதுடைய இளைஞர் என்பது தெரியவந்தது.

அவர் தலைமறைவாக இருக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபரான ஓட்டுநரை 2026.01.08 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.