புட்டு தயாரித்து கேட்ட கணவனை வெட்டி கொன்ற மனைவி

காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு விட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமைபோல வேளாண்மை காவலுக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு சென்று சம்பவ தினமான இன்று காலையில் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது சண்டையாக மாயிய நிலையில் மனைவி கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியதுடன் கோடாரியால் மண்டையை பிளந்தார்.

இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்து தான் கணவனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.