பிள்ளையானின் கட்சி காரியாலய கட்டிட நிலத்தை இடித்து சி.ஐ.டி சோதனை

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் இன்று வெள்ளிக்கிழமை பகல் 11 மணியில் இருந்து முற்றுகையிட்டு கட்டிட நிலத்தை உடைத்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவியினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தை கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப்புலனாய்வு துறையினர் சம்பவதினமான இன்று மு.ப 11 மணிக்கு முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து காரியாலயத்தில் இருந்து எவரும் வெளியேறவோ உட் செல்லவோ விடாது கட்டிட நிலத்தை உடைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.