பிறப்புச் சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் : இன்று முதல் புதிய நடைமுறை

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 டிசம்பர் 14 திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறப்பின்போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச்சான்றிதழில் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது.

மேற்படி இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும்.

இந்த புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பரீட்சார்த்த திட்டம் கம்பஹா, தெஹிவளை, ஹங்குராங்கெத்த, குருணாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு பிறப்புச் சான்றிதழை பெறும் ஒருவர், தனக்கு 15 வயது பூர்த்தியானதன் பின்னர் தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கையில், மேற்படி பிறப்பு சான்றிதழில் உள்ள அடையாள இலக்கத்திலேயே தனக்கான தேசிய அடையாள அட்டையை பெறமுடியும்.

இந்த முறைமையின் ஊடாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்போது, பிறப்பு முதல் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும், ஒரே அடையாள இலக்கத்தை பயன்படுத்துவதால் தனிநபர் கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் சமூக தரவுகளை சேமிக்க அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இலகுவானதாக அமையும்.

மேலும், ஒரே இலக்கத்தின் கீழ் அனைத்து தரவுகளும் காணப்படுவதால், குறித்த நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு இலகுவாக சேவை பெற்றுக்கொள்ளவும் முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172