
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு
-யாழ் நிருபர்-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் கொழும்பில் நடைபெற்றது.
பிரித்தானிய சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் திரு அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம் மற்றும் மனித உரிமைக்கான செயலாளர் திரு. ஹென்றி டொநாட்டி, ரெலோ சார்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பா.உ,, உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் /பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதானமாக, நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையினுடைய கூட்டம், தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கான பிரித்தானியாவினுடைய பங்கு என்பன தற்கால அரசியல் விடயங்களோடு பேசப்பட்டன.
மனித உரிமை பேரவையின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
