பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை நம்ப வேண்டாம் -மணியரசன்-
பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை நம்ப வேண்டாம் என, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார். தமிழ் மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், காசி. ஆனந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் இதில் தெரிவித்துள்ளதாவது.
தலைமறைவிலிருந்து வெளிவந்து மீண்டும் விடுதலை இயக்கத்தைத் தொடங்க இருக்கும் பிரபாகரனுக்கு அவரது இலட்சியத் திட்டத்தை வெளியிட சொந்த அமைப்பு இல்லாமலா இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்?.
இந்த அமைப்பு செயல்பட்ட காலத்திலும், அது செயல்படாத காலத்திலும் அந்த அமைப்பின் சார்பில் கருத்துகள், நிலைப்பாடுகள், முடிவுகளை வெளியிடும் அதிகாரத்தை பழ.நெடுமாறன் உள்ளிட்டோருக்கு அவ்வமைப்பு வழங்கியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
2009 மே 18லிருந்து பிரபாகரன் தப்பிச் சென்று உயிரோடிருக்கிறார் என்று பழ. நெடுமாறன் கூறிவருவதாகத் தெரிவித்த மணியரசன், இன்றுவரை பிரபாகரன் வரவில்லை. இப்போது நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியாவுக்கு எந்த அளவு அதிக விசுவாசத்துடன் பிரபாகரன் இருந்தார் என்று காட்டும் அக்கறையே மேலோங்கியுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை நம்பகத்தன்மை உடையதாக இல்லை எனவும், “இக்கருத்து ஆபத்தானது” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தக்க சான்றுகள் இல்லாமல், பிரபாகரன் வரப்போகிறார் என்று பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் கூறுவதை அப்படியே ஏற்று மக்கள் ஏமாற வேண்டியதில்லை” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.