-மஸ்கெலியா நிருபர்-
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
தமிழ்நாடு, திருச்சி – சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற, யாகப்பூஜைகளில் கலந்துகொண்ட பின்னர், நயினார் நாகேந்திரன் ஜீவன் தொண்டமானின் இல்லத்திற்கு விஜயம் செய்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நயினார் நாகேந்திரனை பொன்னாடையுடன் வரவேற்றார்.
இந்த சந்திப்பின்போது, பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.



