பாழடைந்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் கண்டுபிடிப்பு!

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மற்றுமொரு அரச வாகனம் கண்டுபிடிப்பு .

போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த இடத்தில் மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டிந்த நிலையில்  இன்று திங்கட்கிழமை நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக, நுவரெலியா பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ் வாகனம் நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான கட்டடத்திற்கு அருகில் மறைத்து விடப்பட்ட நிலையில் கண்டு பிடித்துள்ளனர்.

குறித்த வாகனம் பல வருடங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது முன் பக்க இலக்கத்தகடு இன்றியும் பின் பகுதியில் மாத்திரம் இலக்கத்தகடு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஜீப் வாகனமும் மற்றுமொரு ஜீப் வாகனமும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியின் பாவனைக்காக அமைச்சரினால் வழங்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் இதனுடன் தொடர்புடைய மற்றொரு ஜீப் வண்டியை கண்டுபிடிக்க பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பிரதேசத்தில் அரச வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது இவ் ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்