
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நவராத்திரி விழா இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பிரதமர் ஹரினி அமரசூரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன,கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, இந்தப் பூஜை விழாவை நடத்துவதன் மூலம் முழு நாட்டிற்கும் ஆசீர்வாதம் கிடைப்பதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளை சிறப்பாகச் செயற்படுத்தத் தேவையான பலமும், சக்தியும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இங்கு உரையாற்றுகையில், மக்களை அவர்களின் தீய எண்ணங்களிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான பலம் இந்த உயர்ந்த தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பெறப்படுகிறது என்று கூறினார்.
இந்த தெய்வங்களின் நற்பண்புகளையும் மக்கள் உள்வாங்க வேண்டும் என்றும், தெய்வங்களின் ஆசீர்வாதங்களால் சிறந்த மனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்றும் வலியுறுத்தினார்.