பாட்டி வைத்தியம் பேன் தொல்லை நீங்க
🟤பொதுவாக தலையில் அதிகம் பேன் வைத்திருப்பவர்களின் கைகள் எப்பொழுதுமே தலையில் தான் இருக்கும். இவ்வாறு அனைத்து நேரமும் தலையில் பேன் இருந்தால் மற்றவர்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்கள். வீட்டில் ஒருவருக்கு பேன் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள அனைவருக்குமே மிக வேகமாக பரவி விடுகிறது. பெரும் பாலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கே இந்த பேன் தொல்லை அதிகமாக இருக்கும். இது பெரிய மருத்துவப் பிரச்சனையல்ல. தலையில் பேன் இருப்பதால் ஒருவர் சுத்தமற்றவர் என்றோ, சுகாதாரம் இல்லாதவர் என்றோ அர்த்தமில்லை. அந்தவகையில் பேன் தொல்லைக்கு தீர்வு அளிக்கி வகையில் பாட்டி வைத்திய குறிப்புகள் உள்ளன. அது என்ன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
◼வேப்பிலை பாக்டீரியாக்களை ஒழிக்கும் வல்லமை கொண்டது. துளசி குளுமைத் தன்மை அளித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதை தலை முடியின் வேர்களில் படும்படி தேய்த்து, காய்ந்ததும் தலைக்குக் குளித்துவிடுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை குறைய ஆரம்பிக்கும்.
◼உப்பு மற்றும் வினிகரை சம அளவில் தேவைக்கு ஏற்ப கலந்து அதை ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி வேர்களில் படும்படி ஸ்பிரே செய்யுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்தால் பேன் தொல்லை இருக்காது.
◼கற்பூரத்தை தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து இரவு தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை குளித்தால் பேன் முற்றிலுமாக ஒழிந்துவிடும். கற்பூரத்தில் இருக்கும் ஆண்டிபாராசிடிக் என்ற வேதிப்பொருள் பேன்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
◼உப்பு கலக்காத 50 கிராம் வேப்பம்பூவை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், பேன் தொல்லை குறையும்.
◼வாழ் மிளகு மிகவும் மருத்துவம் வாய்ந்த பொருளாகும். இது குறிப்பாக பேன் தொல்லைக்கு சிறந்த மருந்தாகும். வால் மிளகை ஊறவைத்துப் பால் விட்டு அரைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளிக்க, பேன் தொல்லை குறையும்.
◼வேப்பிலைத் தூள் – அரை டீஸ்பூன், கடுக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் – 2 டீஸ்பூன், பயத்தமா – 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன் ஆகியவற்றுடன் வெந்நீரைக் கலந்து தலையில் பூசிக்கொண்டு, பத்து நிமிடம் கழித்து அலசிக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.
◼துளசி இலையை நன்றாக மையாக அரைத்து, தலையில் தடவிச் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் செத்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.
◼பூண்டின் வாசனை மிகவும் உறுதியானது. இந்த வாசனை பேன்களுக்கு அசௌகரியமாக இருக்கும். பூண்டை நன்கு அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து தலையில் சீராக அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளித்தால் பேன்கள் குறையும். வாரம் ஒரு முறை செய்யலாம்.
◼பெட்ரோலியம் ஜெல்லி எனப்படும் வாஸ்லினை வேர்களில் தேய்த்து இரவு தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை தேங்காய் எண்ணெய் தடவி பேன் சீப் கொண்டு வாரினால் அனைத்து பேன்களும் வந்துவிடும். பின் தலைக்குக் குளித்துவிடுங்கள்.
பாட்டி வைத்தியம் பேன் தொல்லை நீங்க
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்