
பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
கல்வி அமைச்சின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான நடாத்தப்பட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது.
குறித்த பாடநெறியானது தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயம், சிராஜ் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பாடநெறிகள் இடம் பெற்றன.
ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம், தொழில் வழிகாட்டல் போன்ற பாடநெறிகள் 45 மணித்தியாலங்களை கொண்டதாக மூன்று மாத காலமாக இடம் பெற்றன.
தேசிய கல்வி நிறுவக வழிகாட்டல்களை கொண்ட பாடநெறியாக இது அமையப் பெற்றிருந்தன. இதில் கலந்து கொண்டு முழுமையாக பூர்த்தி செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. மொத்தமாக 107 இளைஞர் யுவதிகள் இதன் போது சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
எதிர்காலத்தில் தொழில் வழிகாட்டளுக்கான துறைகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டல்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. தொழில்வாண்மையான துறை சார் தொழில்களுக்கு செல்ல குறித்த பாடநெறிகள் தயார்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டது.
தொழில் வழிகாட்டலுடன் கூடிய சிறந்ததொரு முன்னேற்பாடாக இது அமையப் பெற்றுள்ளது. மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு போன்றவற்றின் மூலமாக எதிர்கால திட்டமிடலுக்கான ஒரு அடித்தளமாக மாணவர்களுக்கான உகந்த பாடநெறியாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி கலந்து சிறப்பித்தார். இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐங்கரன் உட்பட மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
