பாடசாலை பாதுகாப்பு சுவர் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவர்கள் காயம்!

பொரளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

புனரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் ஒன்று மதில் சுவரில் மோதியதாலேயே அது இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அச்சந்தர்ப்பத்தில் அதனருகில் நின்ற மூன்று மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் அச்சந்தர்ப்பத்தில் பாடசாலை மைதானத்தில் நின்ற 16 வயதுடைய மூன்று மாணவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் 48 வயதுடைய பெக்கோ இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெக்கோ இயந்திரம் கொழும்பு மாநகர சபையின் பணிப்பிரிவுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.