
பழங்குடி மக்கள் புதையல் புதைத்து வைத்துள்ளதாக நம்பி புதையல் எடுக்க சென்ற நால்வர் கைது!
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கந்தை பிரதேசத்தில், பழங்குடி மக்கள் வசித்ததாகவும், அங்கு புதையல் புதைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பி, அந்தப் புதையலை அகழ்ந்து எடுக்க முயன்ற நான்கு பேர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவம் இடம்பெற்ற இடத்தை சுற்றிவளைத்த இரகசிய பொலிஸார், அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும், சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
