
பள்ளிவாயலில் கேட் விழுந்து சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
-திருகோணமலை நிருபர்-
கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பெரியாற்றுமுனை பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த கதவு (Gate) சிறுவன் மீது விழுந்ததில் சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரியாற்றுமுனை பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த கேட் மேல் ஏறி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கேட் சிறுவன் மேல் விழுந்து காயம் அடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகாயம் அடைந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த அலி அமது என்பவருடைய மகன் பாத்திஹ் (11 வயது) என தெரிய வருகின்றது.
குறித்த சிறுவனின் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இருந்த போதிலும் குறித்த சிறுவன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.
