
பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2310 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -மூதூர் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2310 லீட்டர் மண்ணெண்ணெய் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் திருகோணமலை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மூதூர் பல நோக்கு கூட்டுறவு சங்க களஞ்சியசாலையில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக குறித்த மண்ணெண்ணெய் பரல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
ஒரு பரலில் 210 லீட்டர் மண்ணெண்ணெய் இருப்பதாகவும், 11 பரல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணெய்களை மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனாலும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.