
பல்கலை மாணவன் மரணம்: நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்ற 23 வயது மாணவரான சரித் தில்ஷானின் பகிடிவதை மற்றும் அதைத் தொடர்ந்து தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கை சட்டத்தரணிகளின் சங்கம் (BASL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு இலங்கை சட்டத்தரணிகளின் சங்க தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேனா ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம், கல்வி மற்றும் நீதி அமைச்சர்கள், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் சட்டமா அதிபர் உட்பட பல பிரதிவாதிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக அதிகாரிகள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் பகிடிவதை எதிர்ப்புச் சட்டங்களை அமுல்படுத்தவும் மாணவர்களைப் பாதுகாக்கவும் தவறியதே இந்த துயரத்திற்கு நேரடியாகக் காரணம் என்று இலங்கை சட்டத்தரணிகளின் சங்கம் வாதிடுகிறது.