பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாட்டுக்கு விரைவில் நிரந்தர தீர்வு – அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு!
-யாழ் நிருபர்-
பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கான நிரந்தர தீர்வினை இம்மாத இறுதிக்குள்பெற்றுக் கொடுப்பதற்கு எதிர் பார்ப்பதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற் தொழிலில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை முழுமையாக பொதுமக்கள் வழிபடுவதற்கான ஏற்பாடுகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கம் பொறுப்பேற்ற பின் பல தசாப்த காலமாக பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்படாமல் இருந்த யாழ். பலாலி வீதியை பொது மக்களின் பாவனைக்காக திறந்து விட்டோம்.
அதேபோன்று பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை முழுமையாக பொதுமக்கள் சென்று வழிபடக்கூடிய வகையில் எமது அரசாங்கம் இம் மாத இறுதிக்குள் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஏனெனில் குறித்த ஆலயம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் பல தசாப்த காலமாக சிக்குண்ட ஆலயமாக காணப்படுகின்ற நிலையில் அதனை உரிய முறையில் மக்களிடம் கையளிக்க வேண்டும்.
எமது அரசாங்கத்தை பொறுத்தவரையில் எந்த ஒரு இனத்தினுடைய வழிபாட்டு உரிமையையும் புறந்தள்ளும் விதமாக செயற்படும் அரசாங்கம் கிடையாது.
ஆகவே குறித்த ஆலயத்தை முழுமையாக மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் அதனை மக்களிடம் முழுமையாக கையளிக்கப்படும், என அவர் மேலும் தெரிவித்தார்.