
பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் தியாகிகள் தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!
-மட்டக்களப்பு நிருபர்-
இந்தியாவில் படுகொலைசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் தியாகிகள் தினம் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனையில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான அலியார் முகம்மது பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈழவர் ஜனநாயக முன்னணியின்(ஈபிடீபி) மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா, தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளர் எஸ்.மோகன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான கே.மதன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதாகைகள் வைக்கப்பட்டதுடன், படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் ஒளியேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து கட்சியின் தலைவரின் உரை செயலாளரினால் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறப்புரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






