வைத்தியசாலை பெண் காவலாளியின் மனிதாபிமான செயல்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளி ஒருவரின் பணப்பை தவறுதலாக விழுந்த நிலையில் நோயாளி அழுத வண்ணம் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த நோயாளியிடம் தகவல்கள் பெறப்பட்டு உடனடியாக பெண் பாதுகாப்பு காவலாளி தவறிய பணப்பையை தேடி கொடுத்துள்ளார்.

புல்மோட்டை தேசத்தில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக வருகை தந்த வேளையிலேயே குறித்த நோயாளியான அசனார் லெப்பை இஸ்றுல் பிரமினா (61வயது) அவருடைய பணப்பையும் அதில் ஒரு தொகை பணமும் காணாமல் போய் உள்ளது.

இதனையடுத்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் நிரஞ்சலா சுஜீவனி என்ற பெண் பாதுகாப்பு காவலாளி 7190 ரூபா பணத்தையும், அவரது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சிலவற்றையும் வைத்தியசாலை பொலிஸார் முன்னிலையில் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் தனது பணப்பையை தேடி தந்தமைக்கு வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.