நீண்ட காலம் வரி செலுத்தாத குற்றச்சாட்டில் இலங்கையின் பிரபல பெண் தொழிலதிபர் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் துனேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவால், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரீன் லங்கா டிராவல்ஸ் (Green Lanka Travels), கிரீன் சீட் லங்கா (Green Seed Lanka) மற்றும் கிரீன் ஸ்ரீ லங்கா ஷிப்பிங் (Green Sri Lanka Shipping) ஆகியவற்றின் இயக்குநரான குஷானி நாணயக்கார, உள்நாட்டு இறைவரி  திணைக்களத்தினால் பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்ததாக தெரிய வருகின்றது.

பல உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை தொடர்ந்து, அவர் மீது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கைது செய்வதற்கான பிடியானை பிறப்பிக்கப்பட்டது.

குறித்த பிடியாணைக்கு அமைவாக,  சிறப்பு நடவடிக்கையின் மூலம் நாரஹேன்பிட்டவில் உள்ள வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் பின் கதவு வழியாக தப்பிச் செல்ல முயன்றதாகவும், ஆனால் ஏற்கனவே வளாகத்தை சுற்றி வளைத்திருந்த அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.