நீண்ட காலமாக கைபேசிகளைத் திருடி வந்தவர் கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக கைபேசிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து பெறுமதி வாய்ந்த 9 கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் சாவற்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட நாட்களாக ஊழியர்கள். நோயாளிகளின் கைபேசிகள் திருட்டுப்போயிருந்தன.

கதைத்துவிட்டுத் தருவதாக தெரிவித்துவிட்டு அபகரித்துச் செல்வது, நோயாளிகள் மலசல கூடங்களுக்கு செல்லும் போது அபகரித்துச் செல்வது, என கைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றன.

அவை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ்நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.