நிலா துருப்பிடிக்குதாம்

இந்தப் புவி மண்டலம் பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டதாகவே இருக்கிறது. நாம் கனவிலும் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் இங்குச் சத்தமே இல்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படித் தான் நமது நிலவில் ஒரு திடீர் மாற்றத்திற்கான விடையை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். அதாவது நிலவில் துரு ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் பூமி இருப்பதும்.. நமக்கு இயற்கை துணைக்கோளாக நிலா இருப்பதும் அனைவருக்கும் தெரியும். இதனால் நிலவு குறித்துத் தெரிந்து கொள்ளப் பல புதிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

அதில் நாம் பல புதிய விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கண்டுபிடித்து வருகிறோம். அப்படித் தான் இப்போது ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளோம்.

அதாவது நிலவில் சத்தமே இல்லாமல் ஏதோ மோசமான மாற்றம் நடக்கிறதாம். அதற்குப் பூமி தான் காரணமாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நிலவின் சில பகுதிகளில், குறிப்பாகத் துருவப் பகுதிகளில், இரும்பு ஆக்சைடின் ஒரு வடிவமான ஹேமடைட் (துரு) கண்டறியப்பட்டுள்ளதாம்.

நிலவில் துரு பிடிக்குது.. அவ்வளவு தானே என நீங்கள் கேட்கலாம். பொதுவாக ஆக்ஸிஜன் மற்றும் நீர் இருந்தால் மட்டுமே துருப்பிடித்தல் நிகழும்.

நிலவில் இந்த இரண்டுமே பெரியளவில் இல்லை.. அப்படி இருந்தும் துரு இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக சீன விஞ்ஞானி சிலியாங் ஜின் கூறுகையில், “இந்தக் கண்டுபிடிப்புகள் புவிக்கும் நிலவுக்கும் இடையிலான ஆழமான தொடர்பைப் புரிந்துகொள்ள உதவுகின்றன” என்றார். புவியின் வளிமண்டலத்தில் இருந்து செல்லும் துகள்களே இதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சூரியனில் இருந்து வரும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் (charged particles) பூமியையும் நிலவையும் வந்தடையும். ஒவ்வொரு மாதமும் சுமார் ஐந்து நாட்களுக்குச் சூரியன் மற்றும் நிலவுக்கு இடையில் பூமி வரும்போது, பெரும்பாலான சூரியத் துகள்கள் நிலவுக்குச் செல்வது தடுக்கப்படுகின்றன.

அந்தக் காலகட்டத்தில், புவியின் வளிமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்து செல்லும் துகள்கள் நிலவுக்குச் செல்கிறது. இதை ‘புவி காற்று’ (Earth wind) என்று அழைக்கப்படுகிறது. பூமி இதுபோல மாதத்திற்கு 5 நாட்கள் சூரியக் காற்றைத் தடுப்பதால் அப்போது அங்கு ஆக்சிஜனேற்றம் (oxidation) நடக்கிறது.

இதுபோன்ற ஒரு மாதிரியை ஆய்வகத்தில் ஏற்படுத்தி சோதனை செய்துள்ளனர். நிலவில் உள்ள ஐயர்ன் நிறைந்த தாதுக்களின் படிகங்கள் ஆக்சிஜனை செலுத்தியுள்ளனர். அப்போது சில படிகங்கள் ஹேமடைட்டாக மாறின. அதாவது துரு பிடிக்க ஆரம்பித்தது. துரு பிடித்த அந்தப் படிகம் மீது ஹைட்ரஜனை செலுத்தியபோது துரு மாயமாகி மீண்டும் இரும்பு உருவாகியுள்ளது.

2020ஆம் ஆண்டில், இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவின் துருவங்களுக்கு அருகில் துரு இருந்ததை உறுதி செய்தது. இருப்பினும், எப்படி துரு ஏற்படுகிறது என்பது தெரியாமல் குழப்பம் இருந்தது.

இந்தச் சூழலில் தான் அதற்கான பதிலை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். நிலவில் எப்படித் துரு ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதன் மூலம் வரும் காலங்களில் நாம் நமது சந்திரப் பயணங்களுக்கு இன்னுமே சிறப்பாகத் திட்டமிடலாம். இதன் காரணமாகவே ஆய்வாளர்கள் இதில் ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.