நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு இல்லை – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நிர்வாக முடக்கலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.
தனி ஒரு அரசியல் கட்சியின் நிர்வாக முடக்கலுக்கான அழைப்புக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்பின்னரே ஒரு முடிவுக்கு வந்து பொதுவான திகதியில் நிர்வாக முடக்கலுக்கான அழைப்பை விடுத்திருக்க வேண்டும் என்றும் இது எதுவும் இல்லாமல் ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவு கோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய தம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிம் வலியுறுத்தியுள்ளது .
கடந்த காலங்களில் தமிழ் மக்களது உரிமை சார் பிரச்சினைகளுக்காகப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக தாங்கள் குரல் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயமே என்றும் இருப்பினும் ஒரு சில தரப்பு தமது சுயலாபங்களுக்காக மேற்குறித்த விடயங்களைக் கையில் எடுத்து அரசியல் செய்வதை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அதற்குத் துணை போகமாட்டோம். என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிம் குறிப்பிட்டுள்ளது .
மேலும், பல்கலைக்கழகத்தில் நாளைய பாடநேர அட்டவணைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன.பாடங்கள் உரிய நேர அட்டவணையின்படி ஒழுங்காக நடைபெறும் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வழமை போல கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.