நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி

-அம்பாறை நிருபர்-

நிந்தவூர்-அட்டப்பள்ளம் பிரதேசத்தின் கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை ஆதம்பாவா எம்.பி நேரில் சென்று பார்வையிட்டு, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள அதிகமான பொதுமக்களின் காணி மற்றும் தென்னந்தோப்புகள் கடலுக்குள் சென்று விட்டன.

அதில் ஒருவரின் 5 ஏக்கர் காணி முற்றாக கடலிலுக்குள் காவு கொள்ளப்பட்டுவிட்டது.

இதன் காரணமாக அந்த பிரதேச தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வேண்டிக் கொண்டதிற்கிணங்க, நேற்று திங்கட்கிழமை மாலை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப், பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்தீன், கிழக்கு மாகாண கரையோரம் பேணல் பிரதம பொறியியலாளர் எம். துளஸிதாசன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான சம்சுன் அலி, இப்திகார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் ஆரிப் மற்றும் பிரஜா சக்தி தவிசாளர்கள், பாதிக்கப்பட்ட பயனாளிகள் என பலரும் நேரடி விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட இடத்திற்கு கரையோரம் பேணல் பொறியியலாளரை அவசரமாக அழைத்து இந்த இடத்திற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக முன்னெடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகவும் துரிதமாகவும் முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல், இலங்கை கரையோரம் பேணல் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரோடும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிந்தவூர் (அட்டப்பள்ளம்) பிரதேசத்தின் கடலரிப்பு விடயத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.

மேலும், இது தொடர்பாக பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கடலரிப்பு சம்பந்தமான விசேடமான கூட்டமொன்றை நடாத்துவதற்காக உரிய அமைச்சரோடும் தொலைபேசி மூலம் கலந்துரையாடி விசேட ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வதற்கும் பணித்தார்.