நானுஓயாவில் எரிபொருள் பெளசர் விபத்து: குடிநீரை பயன்படுத்தமுடியாமல் தவிக்கும் மக்கள்

நானுஓயாவில் எரிபொருள் பெளசர் விபத்து  -நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எரிபொருள் கசிவும் ஏற்பட்டு அருகில் இருந்த நீரோடையில் கலந்ததால் மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமிட்டிய, சமர்செட், நானுஓயா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் கீழ் இயங்கும் தம்பகஷ்த்தலாவ, கிளாரண்டன் கீழ் பிரிவு, சமர்செட் லேங்டெல், கிரிமிட்டி கீழ் பிரிவு போன்ற தோட்டங்களில் எரிபொருள் கசிவு கலப்பால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு முதல் இன்று வெள்ளிக்கிழமை வரை மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக தம்பகஷ்த்தலாவ, கிளாரண்டன் கீழ் பிரிவு, சமர்செட் லேங்டெல் , கிரிமிட்டி கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் நீர்தொட்டியில் சேமித்து வைக்கப்படும் நீரின் அதிக அளவு எரிபொருள் கலந்திருக்க வாய்ப்புள்ளதால் குறித்த நீர்தொட்டியில் இருந்து வெளியேறும் நீரினை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விபத்து நடந்த நாளில் இரவு நேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் அதிக அளவு எரிபொருள் கசிந்து சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் குறித்த பகுதிகளில் உள்ள நீரில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதா என நீர் மாதிரிகள் சேகரித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

(நானுஓயாவில் எரிபொருள் பெளசர் விபத்து)