நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொடிய நோய்
நாட்டில் மீண்டும் மலேரியா தலைதூக்கியுள்ளதாக சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயது ஆண் ஒருவருக்கும், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 30 வயது இளைஞருக்கும் மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த நபர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு திரும்பிய பின்னர் கடுமையான நடுக்கம் மற்றும் உடல் நலக்குறைவால் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த இளைஞர், டோகாவில் தங்கியிருந்து நாடு திரும்பிய நிலையில், எந்தவித காய்ச்சல் அறிகுறிகளும் இல்லாமல் பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மலேரியா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளதோடு மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.