நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த குழுவின் கூட்டத்தில் இந்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்,

அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

வளமான தேசம், அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தில் நாம் முன்வைத்த ஒரு முக்கிய விடயமே, சில வருடங்கள் பாராளுமன்றத்தில் பதவி வகித்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் இந்த ஓய்வூதிய முறையை ரத்துச் செய்வதாகும். இதன்படி, தற்போது நடைமுறையிலுள்ள 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியச் சட்டமானது, இந்தப் புதிய சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்கப்படும்.

அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித ஓய்வூதியமும் கிடைக்காது. அதன் பின்னர், அரசியலை ஒரு மக்கள் சேவையாக மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். அரசியல் கலாசார ரீதியாகவும், தேர்தலுக்கு முன்னர் நாம் வழங்கிய வாக்குறுதிகள் ரீதியாகவும் இது மிகவும் முக்கியமான ஒரு படியாகும் என நாம் கருதுகிறோம். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக, நாம் எத்தகைய பாதையில் பயணிக்கிறோம் மற்றும் நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என்பது குறித்த உறுதியான செய்தியை மக்களுக்கு வழங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம், என தெரிவித்தார்