நலன்புரி நன்மைகள் செலுத்துவதில் தகுதியானவர்களை கண்டறிதல் வேலைத்திட்டம்

-கல்முனை நிருபர்-

நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் உள்ள நலன்புரி நன்மைகள் சபையின் நலன்புரி சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக சகல நலன்புரிக் கொடுப்பனவிற்கும் தகுதியான நபர்களை அடையாளம் காண்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றினை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் நலன்புரி நிவாரண நன்மைக் கொடுப்பனவுக்கு தகுதியான நபர்களை அடையாளம் காணுவதற்கான முதற் கட்ட வேலை தற்போது இடம்பெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக இறக்காமம் – 03 ஆம் கிராம சேவகர் பிரிவிற்கான நிகழ்வு வியாழக் கிழமை கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் யூ.எல். அமீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திட்டத்திற்கு பொறுப்பான சமூக சேவைப் பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம் எஹியால் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றுமைஸ், சமூக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். ஜமீல் உட்பட சமூக சேவைப் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.