நற்பிட்டிமுனையில் மூடப்படாமல் கிடக்கும் கழிவுநீர் வடிகான்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகான் உரிய முறையில் மூடப்படாமை காரணமாக மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக மாணவர்களின் பயன்பாட்டில் உள்ள நற்பிட்டிமுனை -03 ஆலையடி வடக்கு வீதியில் உள்ள குறித்த வடிகானில் மூடி இன்மை காரணமாக அப்பகுதியில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இவ் வடிகான்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நிலைமை அறிந்து குறித்த வடிகானின் மூடிகளை நிர்மாணித்து உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.