தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாகத் தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

சருமத்தில் ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும்.

சருமத்தின் நிறத்தில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டால் கிரீம் வகைளை பயன்படுத்தாமல் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சருமத்திற்கு நன்மை அளிக்கும் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் எமது நாட்டில் உள்ளன. எனவே அவற்றைத் தினமும் உண்ணுங்கள். திடீரென உடல் எடை அதிகரித்தால் வைத்தியரிடம் ஆலோசனை பெற்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

தோலில் அரிப்பு, நிறம் மாற்றம், வெடிப்பு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்.

பல்வேறு கிரீம் வகைகளைச் சருமத்தில் பயன்படுத்துவதனாலும் தோல் புற்றுநோய் ஏற்படலாம். எனவே வைத்தியரின் ஆலோசனை இன்றி சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கிரீம் வகைகளைப் பயன்படுத்த வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்