தொழில் நிமித்தம் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் கைது

-நுவரெலியா நிருபர்-

பொகவந்தலாவ பகுதியில் இருந்து பலாங்கொடைக்கு தொழில் நிமித்தம் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் பின்னவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ கெம்பியன் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு இத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பலாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்று மீள திரும்பியவர்கள் மீது நேற்று இரவு பலாங்கொடை மாரதென்ன தோட்டப் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐவர் பலாங்கொடை வைத்தியசாலையிலும், ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பின்னவல பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் பயணித்த பேருந்தை பலாங்கொடை மாரதென்ன தோட்டப் பகுதியில் வைத்து மறித்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்த நிலையில், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்று சனிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து, அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.