தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை : யாழில் நான்கு குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்-

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக யாழ்ப்பாணத்தில் நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை அனர்த்தத்தினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

உடுவில் தெற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/205 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 06 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/ 261, ஜே/276, ஜே/285, ஆகிய கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஜே/261 கிராம சேவகர் பிரிவில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 38.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.