தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மாலை 4.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.

மத்திய தபால் பரிமாற்றத்தில் தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, இன்று அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என்று ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

இருப்பினும், குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்த தபால்மா அதிபர் ருவன் சத்குமார, தபால் ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுபோன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது என்று கூறினார்.

“3,000 உப தபால் நிலையங்கள் உள்ளன. அவை வேலைநிறுத்தத்தில் இல்லை.

இருப்பினும், தபால் பொருட்களை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். தபால்மா அதிபர் என்ற முறையில், ஏற்பட்ட சிரமத்திற்கு இந்த நேரத்தில் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணிக்கு வரத் தயாராக உள்ளவர்கள் உள்ளனர்.

இருப்பினும், அச்சுறுத்தல்கள் உள்ளன. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

இதுபோன்ற நாசவேலை செயல்கள் நடந்தால், நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

IT தளங்கள் சீர்குலைந்துள்ளன. அவற்றை அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாக நாங்கள் பார்க்கிறோம்.

அப்படி நடந்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.