தேசிய மக்கள் சக்தி அரசியலில் ‘ஓய்வு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இலங்கையில் அரசியலில் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது, கடந்த காலங்களில் தேர்தலில் அரசியல்வாதிகள் எவரும் ஓய்வு பெறவில்லை இதை இன்று நாம் செய்துள்ளோம் என, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“முன்னாள் எம்.பி.க்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதான்,” இவ்வாறான சூழ்நிலைகளை உருமாற்றங்கள் என்பர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்கட்சியினரால் சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே அவை அனைத்தும் தவறானது என நிரூபிக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
“எதிர்க்கட்சி முகாம் எங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களைச் செய்தது. வெற்றிக்குப் பின்னர் மோதல்கள் ஏற்படும் என்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்றும் அவர்கள் சொன்னார்கள்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும், இலங்கை உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் என்று எல்லாம் சொன்னார்கள் , ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்கள் கண் முன்னே உடைந்து விட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2010ல் மகிந்த ராஜபக்ச மற்றும் 2020ல் கோட்டாபய ராஜபக்ச போன்ற பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்ட முன்னைய நிர்வாகங்கள் வினைத்திறனான ஆட்சியை வழங்குவதில் தோல்வியடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
“எங்கள் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் இந்த நாட்டின் அரசியல் சவால்களுக்கு புதியவர்கள் அல்ல,” என்று அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்