தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது!

கொழும்பு மாவட்டம் தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட இருவர் மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெதிமால பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கடை ஒன்றின் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்று பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் மற்றும் பிரதான துப்பாக்கிதாரி ஆகிய இருவரும் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தெஹிவளை மற்றும் மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 38 மற்றும் 43 வயதுடைவர்கள் ஆவர்.

மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.