தூர பகுதிகளுக்கும் முறையாக சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு கோரிக்கை

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியா மாவட்டத்தில் தூர பகுதிகளுக்கும் முறையாக சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

கொட்டகலை நகர பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், அங்குள்ள ‘லாப் கேஸ்’ முகவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

சமையல் எரிவாயுவை முறையாக விநியோகிப்பதில் உள்ள நெருக்கடி நிலை குறித்து கேட்டறிந்த அவர், மக்கள் தரப்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

நகர் பகுதிகளுக்கு நெருக்கடிக்கு மத்தியில் எரிவாயு விநியோகிக்கப்பட்டாலும், தூர இடங்களில் உள்ள தோட்ட பகுதிகளுக்கு வருவதில்லை, எனவே, இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன் போது, மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் உறுப்பினர்களும், அதிகாரிகளும் உடனிருந்தனர்.