துவிச்சக்கர வண்டிக்கு மேல் விழுந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துவிச்சக்கர வண்டிக்கு மேலே விழுந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கேணியடி, ஆடியபாத வீதிஇ திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி சிறிராகுலன் (வயது 79) என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொது சுகாதார பரிசோதகரும் இன்றையதினம் டெங்கு ஒழிப்பு களத்தரிசிப்புக்காக மேற்குறித்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றனர்.
இதன்போது குறித்த முதியவர் துவிச்சக்கரவண்டி மீது விழுந்த நிலையில் சடலமாக காணப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த பகுதிக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.