
திருமலை மாவட்ட வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருதினங்கள் கடமை புறக்கணிப்பு
-திருமலை நிருபர்-
திருமலை மாவட்டத்தில் உள்ள சிற்றூழியர்கள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதியன்று கடமைக்காக சமூகம் தரமாட்டோம் என சிற்றூழியர் மேற்பார்வையாளர்கள் ஊடாக வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க பொது விடுமுறை நாட்களில் கொடுப்பனவு வழங்குமாறு சிற்றூழியர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், இன்னும் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் சிற்றூழியர் மேற்பார்வையாளர் ஊடாக மூதூர், தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் ஆகிய இரு நாட்களும் அரச விடுமுறை தினமாகும். இத்தினத்தில் இரவு, பகல் கடமைக்கு சமூகம் தர மாட்டோம் என்பதை மனவேதனையுடன் அறியத் தருவதோடு இந்நாட்களில் வைத்தியசாலையினுடைய சேவைகளுக்கு ஏற்படும் அசௌகங்கரியங்களுக்கு நாங்கள் பொறுப்புதாரிகளல்ல என்பதை அறியத் தருகின்றோம் எனவும் மூதூர் தள வைத்தியசாலை சிற்றூழியர்கள் வழங்கி உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில் அரச விடுமுறை தினங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படாமையினால் தாங்களும் அன்றைய தினம் கடமைகளுக்கு செல்வதில்லை எனவும், மாவட்ட சிற்றூழியர்கள் சங்கத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியசாலை சிற்றூழியர்களின் பொது விடுமுறை கொடுப்பனவை இரத்து செய்தமை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட பிரதம செயலாளர் கூடிய கவனம் எடுத்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்தியசாலைகளின் சிற்றூழியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

