திருமணத்தை மீறிய உறவால் 10 வயது மகனை கொலை செய்த தாய்

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பத்து வயது மகனை ஈவு இரக்கமின்றிக் கொன்றதுடன், உடலைத் துண்டு துண்டாக வெட்டி, பெட்டியில் அடைத்து வனப்பகுதியில் வீசிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தீபாலி ராஜ்போங்ஷி என்கிற கணவரைப் பிரிந்து கௌஹாத்தியில் வசித்து வரும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இரு நாட்களுக்கு முன்பு, ‘டியூஷன்’ வகுப்புக்குச் சென்ற, தனது மகன் மிருன்மோய் பர்மன் (வயது – 10) வீடு திரும்பவில்லை என குறித்த பெண் பொலிஸாரிடம் புகார் அழித்துள்ளார்.

 

சிறுவன் தேடப்பட்ட நிலையில், கௌஹாத்தியில் உள்ள பாசிஷ்டா கோவிலுக்கு அருகே புதரில் பெட்டி ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சிறுவன் மிருன்மோய் கொல்லப்பட்ட பின்னர், அவனது உடலைத் துண்டுகளாக்கி குறித்த பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பெட்டிக்கு அருகே சிறுவனின் புத்தகப் பையும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, தீபாலியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் தனது காதலனுடன் சேர்ந்து மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

குறித்த பெண் கணவர் பிகாஷ் பர்மானிடம் இருந்து, விவாகரத்து கோரி இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் குறித்த பெண்ணுக்கும் அரசு அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராகப் பணியாற்றும் ஜோதிமோய் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது என்றும் அதற்கு பத்து வயது மகன் மிருன்மோய் தடையாக இருந்ததாகக் கருதி, அவனை தீபாலி கொன்றதாகவும் கூறப்படுகிறது.